மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மீண்டும் மழை பொழிய தொடங்கியுள்ள நிலையில் மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் அனைத்திலும் வெள்ள நீர் நிறைந்துள்ளது.
இதேவேளை தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் புணாணை ஜெயந்தியாய பகுதியில் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்வதனால் அவ்வீதி ஊடான பிரதான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்து காணப்படுகின்றது.
நீர் ஓட்டம் அதிகரித்து காணப்படுவதால் சிறிய வாகனங்களில் செல்வது ஆபத்துக்களை ஏற்படுத்துவதுடன், பெரிய வாகனங்களில் சாரதிகள் பாரிய சவால்களுக்கு மத்தியில் பயணம் செய்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக குறித்த பகுதியின் ஊடாக நீர் ஓட்டம் அதிகரிப்பதால் இதனை அண்டிய மக்கள் குடியிருப்பு பகுதிகள் தாழக்கூடிய நிலைமை உருவாகின்றது.
இதன்காரணமாக பொதுமக்கள் அச்ச நிலைமையுடன் வாழ்ந்து வருவதுடன், நெடுந்தூர போக்குவரத்துக்கள் தடைப்படுவதுடன், தொழில் நிமிர்த்தம் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்தோடு வீதியால் வெள்ள நீர் வேகமாக ஓடுவதால் பாதை தெரியாது காணப்படும் நிலையில் பிரதேச மக்களால் பாதையின் ஓரமாக கம்புகளில் சிவப்பு துணி கட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.